தூத்துக்குடி மாநகராட்சி 9-வது வார்டு, பூபாலராயர்புரம் பத்ரகாளியம்மன் கோவில் 2-வது தெரு பகுதியில், கழிவு நீர் செல்லும் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததால், சிறிய அளவில் கூட மழை பெய்தால் அந்த நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.
இதனால் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து, அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தச் செயல்திட்டமும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து இந்நிலையால் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாகவும், விரைவில் கால்வாய்களை சுத்தம் செய்து நீர் ஓட்டம் சீர்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.