நகரம் முழுவதும் இரவு நேரத்திலும் ஒளிவீசும் தூத்துக்குடியை உருவாக்கும் முயற்சியில், தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திரா காந்தி சிலை சந்திப்பு, நேரு பூங்கா, ஆஷ் மெமோரியல் முன்பு மற்றும் பெல் ஹோட்டல் முதல் ரோச் பூங்கா வரை உள்ள பிரதான சாலைகளில் புதிய விளக்குகள் பொருத்தும் பணிகள் துவங்கியுள்ளன.
மொத்தம் 50க்கும் மேற்பட்ட புதிய விளக்குகள் சாலையின் எதிர்புறத்தில் ஏற்கனவே உள்ள மின் கம்பங்களில் பொருத்தப்படுகின்றன. இப்பணிகள் தரமான முறையில், விரைவாக நிறைவடைய வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பணிகள் நடைபெறும் இடங்களை நேரில் பார்வையிட்ட அவர், மின் பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒளிவீச்சு பரவல், பாதுகாப்பு, பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அவருடன் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இணைந்து பங்கேற்றனர்.