தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வளர்ந்து வரும் தொழில் மாநகரமாகிய தூத்துக்குடியில் மக்கள் தொகையும், வாகன நெரிசலும் அதிகரித்து வரும் நிலையில், சாலை வசதி, போக்குவரத்து ரவுண்டானாக்கள், நடைபாதைகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மாநகராட்சி அமைத்துள்ளது.
அதேபோல், சாலையோர வியாபாரிகள் கண்டறியப்பட்டு இதுவரை 6,850 க்கும் மேற்பட்டோர் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் தொழில் மேம்பாட்டுக்காக 6,300 பேருக்கு இரண்டு கட்டங்களாக தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், உணவுப் பொருள் விற்பனையில் தரமான பொருட்களை விற்பனை செய்வது குறித்து வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களை ஒழிக்க மாநகராட்சி தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கூட்டத்தில் தலைமை தாங்கி பேசிய மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள்,
“சாலையோர வியாபாரிகள் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு மாநகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும். வியாபாரிகளின் நலனில் அக்கறை கொண்டு உரிமம் பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி வழங்கி வருகிறோம். மாநகராட்சியானது எப்போதும் சாலையோர வியாபாரிகளுக்கு உறுதுணையாக இருக்கும். அதேபோல், பசுமையான மாசற்ற மாநகரை உருவாக்க மாநகராட்சி எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, மாநகர காவல் துணைக் கண்காணிப்பாளர் மதன், போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் வெங்கட், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் காந்திமதி, சுகாதார அலுவலர் சரோஜா, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மாநகர வர்த்தக சங்க நிர்வாகிகள், வியாபார பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.