Breaking News

ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!!

  • Share on

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் முன்பு, ஸ்டெர்லைட் ஆலைக்காக நிலம் வழங்கிய தெற்கு வீரபாண்டியாபுரம், ஏ.குமரட்டியாபுரம், ஏ.குமரகிரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று (23.09.2025) பெருமளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் மாநில தலைவர் சா.மு.காந்தி தலைமையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரி செல்வம் மற்றும் சிபிஐ எம்எல் கட்சி மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

1996ஆம் ஆண்டு சிப்காட் சார்பில் வெளியிடப்பட்ட ஒரே அரசாணையின் கீழ், சுமார் 1,600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிர்வாக வசதிக்காக பல கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, 2008ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை நிலங்களுக்கு மாறுபட்ட அளவில் இழப்பீடு வழங்கப்பட்டது. இதனால், ஒரே இடத்தில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கே சமச்சீரற்ற இழப்பீடு வழங்கப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து பேசுகையில் சா.மு.காந்தி, “மக்களின் நியாயமான கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் உடனடியாக முதலமைச்சருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” என்றார். ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, “மதுரை உயர்நீதிமன்றம் 2020ஆம் ஆண்டு தனியார் தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தியதே தவறு என தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

சிபிஐ எம்எல் கட்சி மாவட்ட செயலாளர் முருகன், “அரசு மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தினார். புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரி செல்வம், “மக்களுக்கான இழப்பீடு வழங்கப்படாவிட்டால், வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தில் எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தியார் அவர்களால் சட்டமன்றத்தில் வலியுறுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

கிராம பொறுப்பாளர் பெருமாள் மணி நன்றி கூறி ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கோபாலகிருஷ்ணன் மற்றும் சொக்கலிங்கம் செய்திருந்தனர். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


  • Share on

தூத்துக்குடியில் உயர்தர மின் கோபுர விளக்குகள் அமைக்கும் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!

தூத்துக்குடியில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் – மேயர் ஜெகன் அடையாள அட்டை வழங்கி தொடங்கி வைத்தார்!!

  • Share on

Trending News