தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும், நகர்ப்புற உள்ளாட்சி செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் திட்டம், வளர்ச்சி பணிகள் செயல்படுத்தவும் மாநகராட்சிகளில் பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பகுதி சபா கூட்டம் நடத்தப்பட்டு வரப்படுகிறது.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடப்பு காலாண்டுக்கான பகுதி சபா கூட்டமானது இன்று (15.09.2025) திங்கட்கிழமை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அந்தந்த ஒவ்வொரு வாா்டுகளிலும் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 5 இடங்களில் மொத்தம் 60 வாா்டுகளில் 300 இடங்களில் நடைபெறும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்,
அதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும், மாநகராட்சி கணக்குகுழு தலைவரும், கவுன்சிலருமான ரெங்கசாமி தலைமையில் பகுதி சபா கூட்டமானது எட்டையாபுரம் ரோடு தூத்துக்குடி மாநகராட்சி ஹவுசிங் போர்டு கலியா லாவோ பூங்காவில் வைத்து நடைபெற்றது.
பகுதி சபா கூட்டத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்துதல், எஸ்.எம்.டி ஹவுசிங் போர்டில் உடைந்த பழைய வாட்டர் டேங்கை அப்புறப்படுத்துதல், 3 வது வார்டு பகுதிகளில் விடுபட்ட சாலைகளை போடுதல், எஸ்.எம்.டி. ஹவுசிங் போர்டு சிமினி மூலம் புகை மாசு ஏற்படுத்தும் மிக்சர் கடையை அகற்றுதல், 3 வது வார்டு பகுதி அனைத்திலும் தெரு பெயர் பலகை இல்லாத தெருக்களில் தெரு பெயர் பலகை அமைத்து தருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் 3 வது வார்டு பகுதி சபா உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.