தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்டம்பர் 11 ம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இம்மானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
அவரது தியாகத்தை போற்றும் விதமாக தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் வைத்து அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள சமூக நீதி போராளி இம்மானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்க மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாநில பேச்சாளர் சரத் பாலா, மருத்துவரணி அருண்குமார், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், உட்பட கழக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.